Followers

Thursday, November 15, 2012

முஹர்ரம் மாதமும் அது தரும் பாடமும்.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்! அவனே தன் தூதரை நேர்வழியுடனும் சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான். அவனது தூதர் முஹம்மது அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் உண்டாகட்டுமாக. அவர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றினார்கள்! இறைவனின் மார்க்கத்தை ஒளிவு மறைவின்றி அனைவருக்கும் போதித்தார்கள்! இறைவழியில் இறுதிவரை உண்மையான முறைப்படி ஜிஹாது செய்தார்கள் . அவர்களை ஏற்றவர்கள் ஏற்றம் கண்டனர். அவர்களை ஏற்க மறுத்தவர்கள் பெரும் நஷ்டமடைந்தனர்.
முஹர்ரம் மாதமும் அது தரும் பாடமும்.

அல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். இந்த மாதங்களில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும் சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான். இதன் மூலம் மனிதன் அதிகம் நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதும் அவனது அந்தஸ்து நற்செயல்களால் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் ஒரே நோக்காகும். இத்தகைய சிறப்பான மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும்.

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமானவை ஆகும். ( அல்-குர்ஆன் 9:36) எனத் திருமறை கூறுகிறது. அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“வானங்களையும் பூமியையும் படைத்தது முதல் காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு புனிதமானவையாகும். அதிலும் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருகின்ற துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் மாதங்களாகும். அடுத்தது ஜமாதுல் ஊலாவுக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் இருக்கின்ற ரஜப் மாதமும் ஆகும்” (ஆதாரம்: புகாரி)


மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள், புனிதமான மாதங்கள் நான்கு என்பதனை தெளிவு படுத்துகின்றது. அவை:

1) துல் கஃதா, 2) துல் ஹிஜ்ஜா, 3) முஹர்ரம், 4) ரஜப்


எனப்படும் மாதங்களாகும். இம்மாதங்களுக்கு இருக்கக்கூடிய புனிதத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இம்மாதங்களில் பேணவேண்டிய சில ஒழுங்கு முறைகளை இஸ்லாம் நமக்கு தெளிவுபடுத்தி தருகின்றது. ஹுரும் என்ற அரபுச்சொல் தடுக்கப்பட்டவை, புனிதம் என்ற பொருள்களை உள்ளடக்கி இருக்கின்றன.


அல்லாஹ் புனிதமாக்கிய மாதங்களில் ஒன்று முஹர்ரம் மாதமாகும். அதனை நபி(ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துள்ளார்கள். அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் பேணுவது நம் கடமையாகும். மேலும் அல்லாஹ் கூறுகின்றான் ''அதில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் '' (9:36).

புனிதம் மிக்க மஸ்ஜிதுல் ஹராமில் குற்றமிழைப்பது எவ்வளவு குற்றமோ அது போன்றே புனிதம் மிக்க மாதங்களில் தவறிழைப்பதும் பெரும் குற்றமாகும். எனவே மற்ற மாதங்களைக் காட்டிலும் அதிகமாகப் புனிதம் மிக்க மாதங்களைப் பேணுதல் அவசியம் ஆகும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்" (ஆதாரம்: முஸ்லிம்)


முஹர்ரம் மாதத்தின் சிறப்பு:

இம்முஹர்ரம் மாதம் அல்லாஹ்வின் மாதம் என எம்பெருமானார் (ஸல்) அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட சிறப்புமிகு மாதம் ஆகும்.
முஹர்ரம் மாதத்திற்கென்று பல்வேறு தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் தலையாயவை இரண்டாகும்.

இம்மாதம் இஸ்லாமிய வருடப்பிறப்பின் ஆரம்ப மாதமாகும்.
இம்மாதத்தின் 10ஆம் நாள் இறைத்தூதரான மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் சத்திய அழைப்பிற்கு செவிசாய்த்து, ஏகஇறைவன்மீது நம்பிக்கைக் கொண்ட சமூகத்தினரையும் (பனூ இஸ்ரவேலர்), அவர்களை அழித்தொழிக்கப் புறப்பட்ட ஃபிர்அவ்னிடமிருந்து வல்ல இறைவன் பாதுகாத்த நாளாகும்.
"ரமலான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.


மேற்கண்ட ஹதீஸில் இம்மாதத்தை அல்லாஹ்வின் மாதமாக நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துக் குறிப்பிடுகின்றார்கள். மட்டுமல்ல, முஹர்ரம் மாதம் 9 (தாசுஆ) மற்றும் 10 (ஆஷுரா) ஆகிய இரு தினங்களில் அனுசரிக்கப்படும் நோன்புகள் ரமலான் மாத நோன்புகளுக்கு அடுத்தபடியான சிறந்த நோன்புகளாக நபி (ஸல்) அவர்களால் இங்கு அடையாளப் படுத்தப்படுகிறது.

ஆஷூரா நோன்பைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. (அதற்கு), "சென்ற வருடத்தின் பாவங்களுக்கு (அது)பரிகாரமாக அமையும்" என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம்.

ஒரு வருட பாவங்களுக்குப் பரிகாரமாக விளங்கும் இந்த ஆஷூரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் 10ஆம் நாள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.

"மூஸா (அலை) அவர்களைப் பெருமைப் படுத்துவதற்கு யூதர்களைவிட நான் அதிகத் தகுதி வாய்ந்தவன்" எனக் கூறி அவ்வருடம் முஹர்ரம் 10 அன்று நோன்பு நோற்ற நபி(ஸல்) அவர்கள், "எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்" (அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.) எனக் கூறிச்சென்றார்கள்.

முஹர்ரம் மாதத்தின் படிப்பினை:

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உயிரோடு இருந்து முஹர்ரம் 10 அன்று மட்டும் நோன்பு வைத்திருந்தாலும் அவர்களின் எண்ணத்திற்கியைந்து 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பு வைக்கும் முஸ்லிம் சமூகம் அதன் பின்னணியில் உள்ள நபி(ஸல்) அவர்களின் உறுதியான சமுதாய சிந்தனையைக் குறித்து ஆழமாகச் சிந்திப்பதில்லை.

நபி(ஸல்) அவர்கள், "அடுத்த வருடம் உயிருடன் இருப்பின் 9 அன்றும் நோன்பு வைப்பேன்" என்று ஏன் கூறினார்கள்?


அதற்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் விரவிக் கிடக்கும் பல்வேறு நிகழ்வுகள் தெளிவான பதிலைத் தருகின்றன.


யூத சமுதாயம் என்பது, உலகில் பல சமூகங்களை நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்களின் எண்ணிக்கையை வைத்து மிகவும் அதிகமான நபிமார்களைப் பெற்றுக் கொண்ட சமுதாயமாகும். எனினும் தங்களுக்கு அனுப்பப்பட்ட பல நபிகளை நிராகரித்தது மட்டுமன்றி அவர்களுக்கு அனுப்பப்பட்ட நபிகளுள் அதிமானோரைக் கொடூரமாகக் கொலையும் செய்தவர்கள் யூதர்களாவர். இதனால் இறைவனின் கடும் சினத்திற்குரியவர்களாகி இறைவனால் சபிக்கப்பட்ட கூட்டமாக, இறைவனின் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கும் கூட்டமாக அவர்கள் இருக்கின்றனர்.


இந்தக் காரணத்தினால் எப்பொழுதுமே தம்முடைய செயல்களில் எதுவும் யூதர்களுக்கு ஒப்பாக எவ்விஷயத்திலும் இருந்து விடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டனர்.


அதோடு தன் தோழர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் யூதர்களுக்கு மாறு செய்யும்படி வலியுறுத்தவும் செய்தனர். இதற்கு உதாரணமாகப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.


அவற்றில் ஒன்றுதான் இந்த ஆஷூரா 9ஆம் நாள் நோன்பும். எவ்விஷயத்திலும் யூதர்களின் செயலுக்கு, தான் ஒப்பாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய நபி(ஸல்) அவர்கள் நன்மைகள் செய்வதிலும் நன்றி செலுத்துவதிலும் அவர்களைவிட மேலதிகமாக இருக்கும் முகமாக ஆஷூரா 9 அன்றும் நோன்பு வைக்க விழைந்தார்கள்.


இவ்வாறு தமது ஒவ்வொரு அசைவிலும் மாற்றாரின் கலாச்சாரத்தைப் பின்பற்றிவிடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் கவனமாக இருந்ததன் காரணம், இஸ்லாமியக் கலாச்சாரம் எவ்விதத்திலும் மற்ற கலாச்சாரங்களோடு ஒன்றி அழிந்து விடக்கூடாது; தனித்தன்மையும் திகழ வேண்டும் என்று கருதியேயாகும்.


ஆஷூராவின் சிறப்பு.
“நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று வந்ததைக் கண்டனர். அது பற்றி நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் வினவிய போது “மூஸா(அலை) அவர்களையும், இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரி(பிர்அவ்ன்) இடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும்” என்று யூதர்கள் காரணம் கூறினர். “உங்களை விட மூஸா(அலை) அவர்களுக்கு நான்தான் அதிக உரிமை உள்ளவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி, அன்று நோன்பு வைக்குமாறும் உத்தரவிட்டனர். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்கள்: புகாரி 3397, முஸ்லிம்.

இந்தக் கட்டளை மூலம் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்று தெரிந்திருந்தாலும் ஆஷுரா நோன்புக் கட்டாயக் கடமை அல்ல. காரணம் நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது – ரமழான் நோன்பு கடமையாக்கப்படாத நேரத்தில் – இந்த நோன்பைக் கடமையாக ஆக்கி இருந்தனர். ரமழான் நோன்புக் கடமையாக்கப்பட்டபின் ஆஷுரா நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை.
“நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டிருந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின், “விரும்பியவர் இந்த ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கட்டும்! விரும்பாதவர் விட்டு விடலாம்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: புகாரி 1592, முஸ்லிம். இதே கருத்தை முஆவியா(ரழி) அவர்களும் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

“ஆஷுரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர்” என்று நபி(ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது, “அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு இந்த தினத்திற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்கள்: முஸ்லிம் 1916, 1917, அஹ்மத், அபூதாவூது.


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை. நூல்: புகாரி 2006


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1976


நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1977


மேற்கூறிய நபிமொழிகள் மூலம் முஹர்ரம் மாதம் ஒன்பதாம் நாளும், பத்தாம் நாளும், நோன்பு ஸுன்னத் என்பதை நாம் உணரலாம். இதுதான் ஆஷுரா நாளின் சிறப்பு.
கர்பலா

இற்றைக்கு1400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சோக நிகழ்வு அது. நீதியும் அநீதியும் சத்தியமும் அசத்தியமும் மோதிக் கொண்ட நாள் அது.
மனச்சாட்சிகளை உருகவைக்கும் அந்த நிகழ்வுதான் கர்பலா நிகழ்வு. ஹிஜ்ரி 61ம் ஆண்டு அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பேரர் இமாம் ஹூசைன்(ரலி) அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பனீ உமையா கூட்டத்தினரால் கர்பலா எனும் பாலைவனத்தில் மிகபரிதாபகரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
நபியவர்களினதும், தோழர்களினதும் அளப்பெரிய தியாகங்களுக்கும் அயராத உழைப்பிற்கு மத்தியில்; வளர்த்தெடுக்கப்பட்ட புனித இஸ்லாம், உமையாக்களினால் மாசுபடுத்தப்பட்டது.
குர்ஆனின்; விளக்கங்களும் நபியவர்களின் சுன்னாவும் அக்கொடியவர்களின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் சாதகமாக வியாக்கியானம் செய்யப்பட்டன.
அநீதிகளும் அனாச்சாரங்களும் இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றப்பட்டன. இஸ்லாமிய நல்லொழுக்கங்களும் அதன் பெருமான விழுமியங்களும் சிதைக்கப்பட்டு சீரழிக்கப்பட்டன. நபியவர்களின் மார்க்கம் அழிக்கப்படும் அந்த அபாயகர நிலையை கண்டு அதனைப்பாதுகாக்கும் முழுநோக்குடன் இமாம் ஹூசைன்(ரலி) அவர்கள் கர்பலா நோக்கி புறப்பட்டார்கள். அவர்கள் தனது பயனத்தின் நோக்கம் பற்றிக் கூறுகையில் “நான் சமூகத்தில் குளப்பத்தை ஏற்படுத்த இப்பயனத்தை மேற்கொள்ள வில்லை. எனது பாட்டனாரினது மார்க்கத்தில் சீர்திருத்தத்தை மேற்கொண்டு நன்மையை ஏவி தீமையைத்தடுக்கவே இதனை செய்கிறேன்” எனக் கூறினார்கள். நபியவர்களின் மார்க்கம் யஸீதினால் குளிதோன்றி புதைக்கப்படுவதை சகித்துக் கொள்ளாத இமாம் ஹூசைன் அவர்கள் தனது குடும்பத்தாருடனும் தனது போராட்டத்திற்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்த வாக்கு மீறாத தோழர்களுடனும் கர்பலாவுக்கு வருகை தந்து அநியாயக்காரர்களுடன் போராடி தனதுயிரையும் தனது குடும்பம் மற்றும் தோழர்களின் உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையிலே தியாகம் செய்தார்கள்.

நபி(ஸல்) அவர்களின் பேரப்பிள்ளையான ஹுஸைன் (ரலி) அவர்களின் மரணம் (கொலை) யஸீத் பின் முஆவியா என்பவரால் நடத்தப்படுகின்றது. யஸீத் பின் முஆவியா தனி மனிதராக நின்று இந்த காரியத்தில் ஈடுபடவில்லை. அந்ந சம்பவம் நடக்கும் போது சம்பவம் நடந்த கர்பலா பகுதியில் யஸீத் பின் முஆவியா என்பவரே ஆளுனராக இருந்தார். அவருடைய ஆளுமைப் பகுதிகளுக்கு எதிராகவும் அவரது அதிகாரத்துக்கு எதிராகவும் நடந்தேறிய குழப்பங்களிலேயே ஹுஸைன் (ரலி) அவர்கள் கொல்லப்படுகிறார்கள். (முஹர்ரம் மாதம் 10 நாள் இந்த சம்பவம் நடக்கின்றது)


நபி (ஸல்) அவர்களின் அன்புக்கும் அளவுகடந்த நேசத்துக்கும் உரிய பேரரான இமாம் ஹுஸைன் (அலை) அவர்களும், பெண்கள் சிறுவர்கள் அடங்கிய அவர்களது உறவினர்களும் உமையா ஆட்சியாளனான யசீதினால் கர்பலாத் திடலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, ஈட்டி முனையில் சிரசுகள் குத்தி உயர்த்தப்பட்டு ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கோரமான நிகழ்வை எதிர்கொண்ட கசப்பான அனுபவம் இந்த முஹர்ரம் மாதத்துக்கு உண்டு.


வரலாற்றிலே ஒரு திருப்புமுனையாக அமைந்து, குறிப்பிட்டதொரு சகாப்தத்தையே உருவாக்கிய கர்பலா நிகழ்வில் பின்னிப் பிணைந்து காணப்படும் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் வாழ்க்கைத் தடங்கள் மிகுந்த அனுதாபத்திற்குரியனவாகும்.


இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், சிறந்த சிந்தனையுடையோராயும் துணிச்சல் மிக்கோராயும் துன்பங்களையும் ஆபத்துகளையும் எதிர்நோக்கும் வல்லமை பெற்றோராயும் விளங்கினார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உயிரையே இழக்க நேரிட்டாலும் அசைக்க முடியாத மனவுறுதியோடு எதையும் தாங்கும் மனத்திண்மை படைத்தோராய்த் திகழ்ந்தார்கள். இஸ்லாமியக் கொள்கைகளை, கோட்பாடுகளைக் காப்பாற்றிக் கொள்வதிலே அன்னார் காட்டிய வீரமும் மனவுறுதியும் சரியான தீர்மானங்களும் சிலாகிக்கத்தக்கவை.


வெறும் அரசியல் நோக்கிற்காக அல்லாமல், தூர்ந்து செல்லும் இஸ்லாமியத்தைப் பாதுகாக்கும் உயர் இலட்சியத்துடன் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், இந்நிகழ்வில் பங்கேற்றார்கள். ஆட்சியாளர்களை சீர்திருத்தம் செய்வதற்கு சமாதான முயற்சியைப் பயன்படுத்த முனைந்தார்கள். ஆனாலும், நிராயுதபாணியாக நின்ற அவர்களை, உமையாக்கள் கொடூரமாகக் கொன்றனர். தமது ஆட்சிக்கு எதிரான, அல்லது தமது ஆட்சியை விரும்பாத சக்திகளைக் களையும் உமையாக்களின் திட்டத்திற்கு இமாம் ஹுஸைனும் பலியாகிப் போனார்கள்.


ஹிஜ்ரத்
கிபி 622 –ல் முஹ்ம்மது மக்காவிலிருந்து யஸ்ரிப் என்ற மதீனாவிற்கு புலம்பெயர்ந்தார். இதை ஹிஜ்ரத் என்றும், அன்றிலிருந்து புதிய சகாப்தத்துடன், இஸ்லாமியக் காலக்கணக்கு துவங்குவதாக கூறுவதையும் நாம் அறிவோம்.

ஹிஜ்ரத் என நாம் வழமையாக அழைக்கும் வரலாற்று உண்மைகள் முஸ்லிம் பொதுமக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமானவை. இறைதூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் ஒரு சிறு கூட்டத்தினர் மக்காவிலிருந்த தம் வீடுகளை விட்டு மதீனாவுக்குப் புலம் பெயரும் நிர்ப்பந்தத்திற்குட்பட்டனர். அக்கூட்டத்தினர் தம்மிடமிருந்த அனைத்து சொத்துக்களையும் விட்டுசென்றது, ஈமானை மட்டும் அது சுமந்து சென்றது, நபித்துவத்தின் பின்னர் 13 ம் வருடத்தில் இது நிகழ்ந்தது.


இப்பூவுலகில் முதன் முதலாக ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டவர் இறைதூதர் நபி இப்றாஹீம் (அலை) அவர்களே! அன்னார் தமது துணைவியார் ஸாராவுடன் "ஹர்ரான்" என்ற ஊரிலிருந்து "பாலஸ்தீனம்" சென்று அங்கு குடியேறினார்கள். இதுவே இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த முதல் ஹிஜ்ரத் எனக் கருதப்படுகிறது.


தாம் கொண்ட கொள்கையின் அடிப்படையில் அசைக்க முடியாத விசுவாசத்தோடு செயலாற்றுவதை வலியுறுத்தும் இஸ்லாம் எனும் இனிய மார்க்கத்தை காப்பதற்காக அந்த மார்க்கம் போதிக்கும் அறநெறிகளை தம்மில் நிலைநிறுத்தி தாமும் செயற்படுவதோடு, அவற்றைத் தரணியில் தழைக்கச் செய்வதற்காக நாடு துறப்பதையே ஹிஜ்ரத் என்ற பதம் விளக்கி நிற்கிறது.


இவ்வகையில் இறைவனுக்காக இறைதூதர் மீது கொண்டிருந்த தூய அன்பிற்காக இறைவனும் இறைதூதரும் ஈந்தளித்த ‘தீன்’ எனும் சன்மார்க்கத்திற்காக அன்றைய அரபகத்து முஸ்லிம்கள் தாம் பிறந்த புனித மக்கா நகரை மட்டுமல்ல தாம் பெற்ற மக்களை துறந்தார்கள். பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் துறந்தார்கள்.


இறைத்தூதரின் நாடு துறத்தல் என்ற ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டதுதான் முஸ்லிம்கள் பயன்படுத்தி வரும் ஹிஜ்ரி ஆண்டு. இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்விலும் இஸ்லாமிய வரலாற்றிலும் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதுதான் இந்த ஹிஜ்ரத். பெருமானாரின் ஒவ்வொரு அசைவிலும் ஏராளமான பாடங்கள் உள்ளன. அது போல் பெருமானார் செய்த ஹிஜ்ரத்திலும் மனிதர்களுக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளன.


இறைத்தூதரின் நாடு துறத்தல் என்ற ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டதுதான் முஸ்லிம்கள் பயன்படுத்தி வரும் ஹிஜ்ரி ஆண்டு. இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்விலும் இஸ்லாமிய வரலாற்றிலும் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதுதான் இந்த ஹிஜ்ரத். பெருமானாரின் ஒவ்வொரு அசைவிலும் ஏராளமான பாடங்கள் உள்ளன. அது போல் பெருமானார் செய்த ஹிஜ்ரத்திலும் மனிதர்களுக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளன.


யத்ரிப்(மதீனா)வுக்கு ஹிஜ்ரத் செய்யுமாறு இறைவனின் கட்டளை வந்ததும் நான் இறைவனின் தூதர் எனவே புறப்படுகிறேன் என்று புறப்பட்டு விடவில்லை. திட்டம் இடாமலோ, தனித்தோ, யாருடைய உதவியையும் நாடாமலும் புறப்பட்டு விடவில்லை. முறையாகவும் செம்மையாகவும் திட்டமிட்டார்கள். மனிதர்களிடமிருந்து தேவையான உதவிகளையும் பெற்றார்கள்.


மனித மனதில் பல காட்சிகளை வரைய மூல ஊற்றாக அமைந்த, அமையும் இந்நிகழ்வு கவலையையும், மனவெழுச்சிகளையும் தூண்டும் பல நிகழ்வுகளாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. அந்நிகழ்வில் தௌர் குகை நிகழ்வு மிகுந்த மனவெழுச்சியைத் தூண்டக் கூடியது என்பதில் சந்தேகமில்லை. சிலந்தி குகை வாயிலில் வலைபின்னுகிறது. புறா அங்கே கூடு கட்டுகிறது. விரட்டுவோரை வழிதவறச் செய்யும் நிகழ்வுகளாக இவை அமைந்து விடுகின்றன. இறுதிமுடிவை தீர்மானிக்கும் அந்தச் சில நிமிடங்களின்போது இறைதூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர் அபூபக்கர் (ரழி) அவர்களுக்கு அப்பிரமிக்கச் செய்யும் ஆச்சரியமான வார்த்தைகளைக் கூறுகிறார்:



நபி(ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் ஓர் திருப்பு முனையாக அமைந்துள்ளது போன்று, அவர்களின் வாழ்க்கை முறையும் மனித சமுதாயத்திற்கு ஒரு வழி காட்டலாக அமைந்திருப்பதை நாம் அறிந்திருந்தும் நமது வாழ்வை இஸ்லாமிய நெறிகளின் பால் செலுத்தி சீர்படும் எண்ணத்துடன் அதை வரவேற்பதில் தான் உண்மையான புத்தாண்டின் மகிழ்வு அமைந்திருக்கிறது. வல்ல நாயன் நல்லதோர் திருப்புமுனையை நமது வாழ்விலும் நல்கி, நலம் பல பெற அருள் புரிவானாக! ஆமீன்.
**********************************************************************************
அஹமட் யஹ்யா. ஹொரோவபதான, அனுராதபுரம். SRI LANKA.
 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 
  

No comments:

Post a Comment