Followers

Tuesday, November 13, 2012

எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம்.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....


எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம்.

தாயின் வயிற்றில் நம்மை ஒப்படைத்து உதவினானே!

உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து. (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே, சிந்தித்து விளங்கிக் கொள்ள கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்கள் விவரித்துள்ளோம் (6:98)

நம் உயிருக்கு உடல் கொடுத்து உதவினானே!

அவன்தான் கர்ப்ப கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை, அவன் யாரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான் (3:6)

தாயின் கர்ப்பப் பையில் நம் உயிரை கண்காணித்து உதவினானே! ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப் பைகள் சுருங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது (13:8)


வளரும் பருவத்தில் நமக்கு கல்வி அறிவைக் கொடுத்தானே!
”(நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். நீர் ஓதும், உமது இறைவன் மாபெரும் கொடையாளி, அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாத வற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.” (96:5)

நமக்கு வாழ வழிவகை செய்து ஆற்றலை கொடுத்தானே!

நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். (அல்குர்ஆன்: 16:14)

நமக்கு ஆற்றல் மட்டும் போதுமா என்று எண்ணி நம் ஆற்றலுக்கு உதவியும் செய்தானே!
அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப் படுத்தப்படுவீர்கள். (43:11)
பல முறை தோற்றும் கரையைத் தொட முயன்றிடும் கடலைப் பார்!
நேரம் தவறாமல் விழித்திடும் சூரியனைப் பார்!
எதையும் எதிர்பார்க்காமல் தன் பயணத்தைத் தொடரும் காற்றைப் பார்!
மழை பொழிந்தாலும் மனம் தளராமல் பயணிக்கும் எறும்புகளைப் பார்!
பசித்த போதிலும் பகிர்ந்து உண்ணும் காக்கைகளைப் பார்!
இலைகள் உதிர்ந்த போதிலும் வருந்தாத இலவ மரங்களைப் பார்!
எவ்வளவோ இருக்கின்றனவே?
பறவைகள் பறக்க வேண்டும் என்பதற்காக ஆகாயம்
அசைய வேண்டியதில்லை.
இறக்கைகள் அசைத்தாலே போதுமே!...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~

தோட்டத்துக்குப் பெருமை பூ மலர்வதில் தான் இருக்கிறது!

மேகத்துக்குப் பெருமை மழை பொழிவதில்தான் இருக்கிறது!
சூரியனுக்குப் பெருமை வெயில் அடிப்பதில் தான் இருக்கிறது!
நிலவுக்குப் பெருமை இரவில் பிரகாசிப்பதில் தான் இருக்கிறது!
பூமிக்குப் பெருமை பயிர்கள் விளைச்சலில் தான் இருக்கிறது!
மூளைக்குப் பெருமை குர்ஆனை சிந்தனை செய்வதில் தான் இருக்கிறது!
உனக்குப் பெருமை நான் முஸ்லிம் என்று
கூறி செயல்படுவதில் தான் இருக்கிறது!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~

கனவுகளும் நிறங்கள் தான் விழிக்கும் வரையில்!

தோல்விகளும் நிரந்தரம் தான் முயற்சிக்கும் வரையில்!
சோதனைகளும் தலைவலி தான் தன்னம்பிக்கை வளரும் வரையில்!
மயிலுக்கு அதன் தோகை அழகு
மானுக்கு அதன் துள்ளல் அழகு
குயிலுக்கு அதன் குரல் அழகு
கிளிக்கு அதன் கொஞ்சும் பேச்சு அழகு
இளைஞனே..உனக்கு நன்னடத்தையே அழகு

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~

உயர்ந்த இலட்சியத்துக்காக கனவு காண் - முயற்சி செய்

ஒரு நாள் வாழ்வில் வெற்றி பெறலாம்
முயற்சி செய்யாமல் விட்டு விடாதே! உன் வாழ்வே கனவாகி விடும்.
ஆயிரம் விளக்குகள் எரிய ஒரு தீக்குச்சி போதும்!
ஆயிரம் பூக்கள் மலர ஒரு விதை போதும்!
மணிக்கணக்கில் செய்யும் உபதேசத்தை விட
ஒரு கண நேரம் செய்யும் உதவியே உயர்வானது!
இறை வணக்கத்திற்காக ஒவ்வொரு தடவையும்
தலை பணியும் போது இறைவனிடமும், மனிதனிடமும் உன் மதிப்பு உயர்கிறது
சிகரத்தின் உச்சியை அடைந்து விட்டேன் என்று இறுமாப்பு கொள்ளாதே!
நீ ஏறியது வெறும் பனிச்சிகரமே! அது காலைக்கதிர் ஒளியாமல் கரைந்து விடும்!
உன் வெற்றிக்கால் தடம் பதிக்கையில் ரேகை தேடாதே!
முயற்சியைத் தேடு!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஹமட் யஹ்யா.ஹொரோவபதான,அனுராதபுரம்,SRI LANKA
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 
 

வேண்டும் தன்னம்பிக்கை.

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

வேண்டும் தன்னம்பிக்கை.
 
தன்னம்பிக்கை இன்றி எதுவும் செய்ய இயலாது
உங்களுக்கு உங்களின் மீது நம்பிக்கை இருந்தால்
உங்கள் கீரிடங்களை யாராலும் பறிக்க முடியாது

நம்பிக்கை ஒன்று போதுமே

எதிர்காலம் ஒன்றைப் பார்க்கச் செய்யலாம்

நம்பிக்கை இருக்கும் போதிலே

எதிர்நீச்சல் போட்டு வாழ்வை வெல்லலாம்

என்னமுடியும் எதைச் செய்ய முடியும்

என்ற எண்ணமெல்லாம் அவநம்பிக்கை

எல்லாம் முடியும் எதுவும் என்னால் முடியும்

என்ற கொள்கைகள் தான் தன்னம்பிக்கை

தன்னம்பிக்கையோடு எதிர்த்துப் போராட வேண்டும்... என்றெல்லாம் குரல் கொடுக்கிறார்கள். ஆனால் நாம் திறமையோடு முன்னேற நினைத்தால் அதற்கு முட்டுக் கட்டையும் போடுகிறார்கள்!


ஒரு சிலர், ஒன்று நடந்த பிறகு தான் அதைப் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் உணர்ந்து கொள்வார்கள். ஆனால் ஒரு தன்னம்பிக்கையாளன் என்பவன் "இதை செய்தால் இது தான் விளைவு!" என்று சிந்தித்துப் பார்த்து விட்டுதான் அதை செய்யவே தொடங்க வேண்டும். அதற்குப் பெயர் தான் தன்னம்பிக்கை.


ஒன்றை செய்தால் அதில் நான் வெற்றி பெறுவேன். அல்லது இப்படிப் பேசினால் மற்றவர்கள் அதை இவ்வாறு தான் புரிந்து கொள்வார்கள் என்று தெரிந்து செய்வது தான் தன்னம்பிக்கை!


ஒரு செயலை செய்துவிட்டு அதற்கு மற்றவர்களின் பாராட்டை எதிர் பார்த்திருந்தால். அது தன்னம்பிக்கை இல்லை. யாரும் பாராட்டவில்லையே என்று கவலைப் பட்டால் அந்த செயலை செய்ததற்கான தகுதியே நமக்கில்லை என்று தானே பொருள்? ஏனென்றால் தான் செய்யும் செயல் சிறந்ததா? இல்லையா? என்பதைக் கூட அறிந்திருக்கவில்லை என்றால் நாம் எதற்காக அந்தச் செயலை செய்ய வேண்டும்? தன்னம்பிக்கை என்பது மற்றவர்கள் சொல்லித் தெரிந்து கொள்ளும் விஷயம் அல்ல.


இன்றைய மனிதர்களில் அதிகம் பேர் ஏதாவது ஒரு கவலையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறு தடையையும் பெரிதாக எண்ணி கவலைப் படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததுதான்.


நமக்கு நண்பனும் நாமே; பகைவனும் நாமே என்று சொல்வதுண்டு.. அதாவது, எவன் ஒருவன் தன் பலவீனங்களை முறியடித்து வெற்றி பெறுகிறானோ, அவன் தனக்குத்தானே நண்பனாவான். யார் ஒருவன் தன் பலவீனங்களை வெற்றி பெற முடியாமல் தவிக்கிறானோ அவன் அவனுக்கு எதிரியாவான் என்று அர்த்தம்.


ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலையில், உங்கள் தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். அன்றி உங்களுக்கு
செவியையும், கண்களையும், அறிவையும் கொடுத்தவன் அவனே தான். -அல் குர்ஆன் .16:78


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னடக்கத்தோடு வாழ்ந்தார்கள். இறைக் கட்டளையையே செயல்படுத்தி னார்கள். எளிமையாக வாழ்ந்தார்கள். சமூகத்திற்கு மட்டு மல்ல தன் குடும்பத்திற்கும் நல்ல தலைவராக விளங்கி னார்கள். நபிகளார் தன் கிழிந்த உடைகளைத் தைத்துத் தந்திருக்கிறார்கள். நைந்த தனது காலணிகளைச் செப்பனிட்டு அணிந்திருக்கிறார்கள். என அன்னை அயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். தன்னடக்கத்துடன் எளிமையும் இதில் வெளிப்படுகிறது. (திர்மிதி, )

இறைவன் அருளிய இஸ்லாம் கடமைகளை நிறைவேற்ற அவர்கள் இப்பூவுலக மக்கள் மீது கொண்ட நம்பிக்கைத்தான் இன்று உலகம் முழுவதும் ஈமான் என்னும் நம்பிக்கை கொண்ட கோடானுகோடி முஸ்லீம்களையும், முஸ்லீம் நாடு களையும் உருவாக்கியுள்ளது. அரபு நாட்டின் ஏதாவது ஒரு வெயில் சுட்டெறிக்கும் பாலைவனத்தில் நட்டு நடுவே நின்று விட்டு அந்த இடத்தில் நிலவு தோன்றா வளர்பிறையின் முன்னிரு நாட்களில் நின்று பயங்கர இருளில் நின்று யோசித்தால் எதுவுமே கிடைக்காத இந்த ஏகாந்த மணல் பூமியில் மனித சஞ்சாரமே இல்லாத ஜீவனற்ற இந்தப் பாழ்வெளியில் எவ்வளவு பெரிய மாபெரும் தலைவரை இறைவன் நபியாகத் தந்திருக்கிறான் என்பது புலப்படும். உடலும், உள்ளமும், பக்தியினாலும், பயத்தினாலும், குளறும். இறைவன் கிருபையாளன், கருணையாளன் என்பது புலப்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்திறன் புலப்படும்.

இந்த உலகில் மனிதன் தனது அறிவைக் கொண்டு எவ்வளவு பெரிய விசயங்களை எல்லாம் கண்டு பிடித்து விட்டான். ஆனால் அவனால் அவனை திருப்தி படுத்தி கொள்ளவோ தன்னை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளவோ முடியவில்லை. உதரணமாக உலகில் எவ்வளவு வன்முறைகள் நடக்கின்றன. நாடுகள் சண்டையிட்டு கொல்கின்றன. நாடு மக்களை கொல்கிறது. ஏன் தனக்கு என்ன வேண்டும் என்றே தெரியாமல் பல பேர் உள்ளார்கள். ஏழை மேலும் ஏழை ஆகிக்கொண்டே இருகிறார்கள். வியாதிகள் மேலும் பெருகிகொண்டே இருகின்றன. இவை எல்லாவற்றையும் சரி செய்ய முடியுமா? இவை எல்லாவற்றிற்கும் காரணம் என்ன? நாம் இவற்றை எல்லாம் மாற்ற முடியாது. ஆனால் நம்மால் நம்மை சரி செய்து கொண்டால் நம் ஒருவர் மூலம் இந்த சமுதாயத்திற்கு நல்ல விசயங்களை கொடுக்க முடியும். இதே போல் எல்லோரும் நம்மை சரி செய்து கொண்டால் இந்த நாட்டில் அனைவருக்கும் எல்லாம் கிடைத்து விடும்.


தோல்வி என்பது ஒரு விஷயத்தை மீண்டும் பரிசீலனை செய்ய ஒரு வாய்ப்பு. எங்கோ தவறி இருக்கிறோம் என்பதைப் புலப்படுத்தும் நமக்குத் தெளிவுபடுத்தும் ஒரு நிகழ்ச்சி. அதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பல நேரம் நாம் செல்லும் திசையைத் திருப்புவதற்காக அத்தகைய தோல்விகள் ஏற்படுவதுண்டு.


"நபியவர்களின் இறுதிப் பேருரை"

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.' மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: "நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.' (ஸுனன் இப்னு மாஜா 1892,1893)
 
பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
 
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!  
ஒ... மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

பிறர் உடமையைப் பேணுவீர்!
 
ஒ... மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.

அராஜகம் செய்யாதீர்கள்!
 
அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள். (ஸஹீஹுல் புகாரி 4403)

உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான்.

நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

பணியாளர்களைப் பேணுவீர்!
 
ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்!

மறுமைக்கு அஞ்சுவீர்!
 
ஓ... குரைஷிகளே! நாளை மறுமைக்கான தயாரிப்புடன் மக்கள் வரும்போது நீங்கள் உங்கள் பிடரிகளின் மீது உலகச் சுமைகளைச் சுமந்துகொண்டு வந்து விடாதீர்கள். அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்குப் பலன் அளித்திட முடியாது (மஜ்மவுஸ் ஸவாயிது 272/3)

அநீதம் அழிப்பீர்!
 
அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது. வட்டியை அல்லாஹ் தடைசெய்து விட்டான். எனவே, முதலில் (என் குடும்பத்தைச் சேர்ந்த) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியைச் செல்லாததாக ஆக்குகிறேன்.

அறியாமைக்கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இனி, பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதில் முதலாவதாக என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலை ரத்துச் செய்கிறேன். அறியாமைக் கால கொலை குற்றத்தில் இதை நான் முதலாவதாக தள்ளுபடி செய்கிறேன் (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)


முறைதவறி நடக்காதீர்!
 
அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789)

உரிமைகளை மீறாதீர்!
 
ஒரு பெண் தமது கணவரின் வீட்டிலிருந்து அவரது அனுமதியின்றி எதையும் செலவு செய்யக்கூடாது. அப்போது, "உணவையுமா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், "ஆம்! அதுதான் நமது செல்வங்களில் மிகச் சிறந்தது' என்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிஇ1789, ஸுனன் அபூ தாவூத் 3565)

ஒ... மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)


இரவலாக வாங்கப்பட்ட பொருட்கள் உரியவரிடமே ஒப்படைக்கப் படவேண்டும்; பாலைக் கொண்டு பயன்பெற கொடுப்பட்ட கால்நடைகள் (அவற்றின் பயன்பாடு தீர்ந்தவுடன்) அவற்றின் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்; கடன்கள் நிறைவேற்றப்பட வேண்டும்; இழப்பீடுகளை நிறைவேற்ற தலைவனே பொறுப்பாளன். (ஸுனன் அபூதாவூத் 3565, ஜாமிவுத் திர்மிதி 2120, 2121, ஸுனன் இப்னு மாஜா)


பெண்களை மதிப்பீர்!
 
கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி அடிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)

இரண்டைப் பின்பற்றுவீர்!
 
மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)
எச்சரிக்கையாக இருப்பீர்!
 
மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! (பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)

இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும். (ஸஹீஹல் புகாரி 4402)


இறை ஏற்பாட்டை மாற்றாதீர்!
 
(மாதத்தின் நாட்களை தன் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் இறை நிராகரிப்பை அதிகரிக்கும் செயலாகும். ஆதனால் நிராகரிப்பவர்கள்தான் வழிகெடுக்கப்படுகிறார்கள். எனென்றால், அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி ஒர் அண்டில் அம்மாதங்களில் போர் புரிவதை ஆகுமாக்கிக் கொள்கிறார்கள். மற்றோர் ஆண்டில் அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். (அல்குர்அன்9:37) (தாரீக் இப்னு கல்தூன் 59/2)

அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக காலம், வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்றிருந்த அதன் அமைப்பைப் போன்றே, இப்போதும் சுற்றிவருகின்றது. அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். இப்படித்தான் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்று, அவனது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. மூன்று, தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், நான்காவது ஜுமாதல் உலாவிற்கும் ஷஅபானிற்கும் இடையில் உள்ள ரஜப் ஆகும். (ஸஹீஹுல் புகாரி 4662, ஸுனன் அபூதாவூத் 1942)


சகோதரம் பேணுவீர்!
 
ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! ஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவே ஆகுமானதல்ல; மனமுவந்து கொடுத்தாலே தவிர! உங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள் (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, தாரீக் இப்னு கல்தூன் 59/2, பிக்ஹுஸ் ஸீரா 456)

சொர்க்கம் செல்ல இதுதான் வழி!
 
ஒ... மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!. (ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)

குற்றவாளியே தண்டிக்கபடுவார்!
 
ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார். (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)

இஸ்லாம் முழுமையாகி விட்டது!
 
ஒவ்வோரு இறைத்தூதரின் பிரார்தனையும் (இவ்வுலகிலேயே) முடிந்து விட்டன; என் பிரார்த்தனையைத் தவிர! நான் அதை மறுமை நாளுக்காக என் இறைவனிடம் சேமித்து வைத்திருக்கிறேன். அறிந்து கொள்ளுங்கள்; மறுமை நாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன். (மஜ்மவுஸ் ஸவாயிது 271/3)

மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. (ளிலாலுஸ் ஜன்னா 1061)


இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம். (ஸஹீஹுல் புகாரி 67,105,1741)


பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, "மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்'' என்றார்கள்.


உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி "இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!'' என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)


இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:"இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)'' (அல்குர்அன் 5:3) (ஸஹீஹுல் புகாரி 4406, 4407,


எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~********************~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஹமட் யஹ்யா. ஹொரோவபதான,அனுராதபுரம்.SRI LANKA.
_________________________________________________________________________________