பிரயோசனம் தரும் நபிமொழிகள்.
பிரயோசனம் தரும் நபிமொழிகள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் விஷயத்தில் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்பவர்களுக்கும் என்
விஷயத்தில் அமர்பவர்களுக்கும் என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு
செலவுசெய்பவர்களுக்கும் எனது பிரியும் உறுதியாகிவிட்டது என்று அல்லாஹ்
கூறுகிறான்.
அறிவிப்பவர்: முஆத் (ரலி)
நூல்: அஹ்மத் (21114)
______________________________ _______________________________________
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே?
என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது
நிழலைத் தருகிறேன் என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (4655)
______________________________ _______________________________________
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அதைப்
பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். 1.
அல்லாஹ்வின் வேதம் 2. அவனது தூதரின் வழிமுறை ‘ என நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: ஹாகிம் 318
______________________________ _______________________________________
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக்
கடைப்பிடியுங்கள். ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன்” எனறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 4711
______________________________ ________________________________________
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதருக்கு (மறுமையில் ) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே
அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு
(மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து
நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)
நூல்: திர்மிதீ 2319
______________________________ ________________________________________
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது
விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும்
தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும்
நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 2323
______________________________ ________________________________________
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர்
உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில்
சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.
அறிவிப்பாளர். அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்
நூல் : முஸ்லிம் 5030
______________________________ ________________________________________
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும் , அது அல்லாத வேறு எந்தத்
துன்பமாயினும் ( அதற்கு ஈடாக) , மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று
அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை ” என்று அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்
நூல் : முஸ்லிம் 5023
______________________________ ________________________________________
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை , அவர்கள் அதன்படி
செயல்படாத வரை , அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாத வரை அல்லாஹ்
(அவற்றுக்குத் தண்டனை வழங்குவதில்லை) மன்னித்துவிடுகிறான்.
அறிவிப்பாளர். அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல்: புகாரி 6664
______________________________ ________________________________________
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நபித்தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்கள் உள்ளத்தில்
சில (தடுமாற்றமான) விஷயங்கள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்)
பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ)காரியமாகக் கருதுகிறோம்” என்று
கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உண்மையிலேயே நீங்கள் அத்தகைய
உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு
நபித்தோழர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். அதற்கு, “அதுதான்
ஒளிவுமறைவற்ற (தெளிவான) இறைநம்பிக்கை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).
நூல் : முஸ்லிம் 188
______________________________ ________________________________________
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர் ;
( தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகின்றவர்களைத் தவிர. ஒரு மனிதன்
இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்து விட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ்
அவனது பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவிட்டிருக்க , இன்னாரே!
நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன் என்று அவனே கூறுவது
பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத்
தெரியாமல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால் ,) இறைவன் மறைத்ததைக் காலையில்
அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான்.
அறிவிப்பவர். அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல்: புகாரி 6069
______________________________ ________________________________________
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
” மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக
நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக
குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர்
தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும்
நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை
செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக
நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக்
கொண்டேயிருப்பார் ” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5778
______________________________ ________________________________________
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வை இரட்சகனாகவும், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகவும், முஹம்மது நபி
(ஸல்) அவர்களை இறைத் தூதராகவும் நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன் என்று
கூறுபவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ -ரலி, நூல் : அபூதாவூத் 1306)
______________________________ ________________________________________
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதரே! நல்லறங்கள் புரியும் ஒருவரை அவரின் நல்லறங்களுக்காக
ஒருவர் நேசிக்கிறார், ஆனால் நேசிப்பவரோ அவரைப் போன்று நல்லறங்கள்
புரியவில்லை, இவரைப் பற்றிக் கூறுங்களேன்! என்று நபி (ஸல்) அவர்களிடம்
ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மனிதன் அவன் யாரை
நேசிக்கின்றானோ அவருடன் (மறுமையில்) இருப்பான் என்று கூறினார்கள். இதனைக்
கேட்ட நபித்தோழர்கள் இதற்கு முன்னர் வேறு எதற்கும் மகிழ்ச்சியடைந்து நான்
கண்டிடாத அளவுக்கு மகிழ்ந்தனர்.
(அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், நூல்: அபூதாவூத் 4462)
______________________________ ________________________________________
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான். அவனுக்கு அநியாயம்
செய்யக் கூடாது. காட்டிக் கொடுக்கக் கூடாது. யார் தன் சகோதரனின் தேவையை
நிறைவேற்றுகிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான். யார் ஒரு
முஸ்லிமின் நெருக்கடியை அகற்றுகிறாரோ கியாமத் நாளின் நெருக்கடிகளில் ஒரு
நெருக்கடியை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றுகிறான். யார் ஒரு முஸ்லிமின்
குறையை மறைக்கிறாரோ அவரது குறையை அல்லாஹ் மறைக்கிறான் என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்:
இப்னு உமர் (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 2262, முஸ்லிம்)
______________________________ ________________________________________
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும்
கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்தி ருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும்
கிடைக்காமல் போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையா
வது பெற்றுக்கொள்ளலாம்! கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்து
விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்!
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)
நூல் : புகாரி (2101)
______________________________ ________________________________________
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன்
சுவையும் நன்று!வாசனையும் நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல்
இருப்பவர், பேரீச்சம் பழத்தைப்போன்றவராவார். அதன் சுவை நன்று; அதற்கு வாசனை
கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டுகுர்ஆனை ஓதி வருகின்றவனின் நிலை
துளசிச் செடியின் நிலையை ஒத்து இருக்கின்றது. அதன்வாசனை நன்று, சுவையோ
கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின்நிலை
குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு
வாசனையும்கிடையாது.
அறிவிப்பவர்: அபூ மூஸா அஷ்அரீ (ரலி)
நூல்: புகாரி 5020
______________________________ ________________________________________
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண்கள் வளைந்த எலும்பு போன்றவர்கள். அதனை நிமிர்த்த முயன்றால் அதனை
உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளை விட்டு விட்டால்
அவளிடம் இன்பம் பெறுவாய் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3331, 5184, 5186
______________________________ ________________________________________
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப்போன்றவன் ஆவான்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (2589)
______________________________ ________________________________________
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது; அதில்
அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கின்றார்; அவரது மேனியிலுள்ள அழுக்குகளில்
எதுவும் எஞ்சியிருக்குமா? எனக் கூறுங்கள்' என்று நபித்தோழர்களிடம் நபி
(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது'
என நபித்தோழர்கள் கூறினர். 'இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன்
மூலம் அல்லாஹ் (சிறிய) பாவங்களை அகற்றுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 528, முஸ்லிம் 1071
______________________________ ________________________________________
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்து
வரை இரும்பாலான அங்கிகள் அணிந்த இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம்
செய்பவர் தர்மம் செய்யும் போதெல்லாம் அவருடைய அங்கி விரிந்து விரல்களை
மறைத்துக் கால்களை மூடி, தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன்
செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு
வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும் அவன் அதை விரிக்க முயன்றாலும் அது
விரியாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1443, 1444, 5797
______________________________ ________________________________________
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் எனக்கு
முன்பிருந்த இறைத்தூதர்கன் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக
அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு
விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து
விட்டு ஆச்சரியமடைந்து, இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக்
கூடாதா? என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான்
தான் இறைத் தூதர்களில் இறுதியானவன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 3535
______________________________ ________________________________________
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் நினைவு கூறப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலை
உயிருள்ளவர்களின் நிலைக்கும், அல்லாஹ் நினைவு கூறப்பட்டுப் போற்றப்படாத
இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.
அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்: முஸ்லிம் 1429
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அஹமட் யஹ்யா
ஹொரோவபதான.
அனுராதபுரம்.
SRI LANKA.
_____________________________________
No comments:
Post a Comment