Followers

Tuesday, October 16, 2012

இஸ்லாத்தில் இத்தா

 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.


இஸ்லாத்தில் இத்தா

இத்தா என்பதற்கு எண்ணுதல் என்று பொருள்படும். இஸ்லாமிய மார்க்கத்தில் கணவனை இழந்த பெண்களும் தலாக் (மணவிலக்கு) செய்யப்பட்ட பெண்களும் குறிப்பிட்ட காலம் மறுமணம் செய்யாமல் காத்திருப்பது கடமையாகும். இவ்வாறு காத்திருப்பதற்கு ‘இத்தா’ என்று சொல்லப்படும்.
இத்தா அனுஷ்டிக்கும் பெண்களைப் பொறுத்து இக்காலத்தை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றது.


1. கணவனை இழந்த பெண்களின் இத்தாக் காலம்:
 
கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் ‘இத்தா’ இருக்க வேண்டும் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது. இறைவன் தனது திருமறையில்,

‘ உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.’ (அல்குர்ஆன் 2:234)

2. விவாகரத்து செய்யப்பட்ட பெண்களின் இத்தாக் காலம்:
 
விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் மறுமணம் செய்யக் கூடாது என இஸ்லாம் குறிப்பிடுகின்றது. இறைவன் தனது திருமறையில்,

‘விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன் ஞானமிக்கவன்.’ (அல்குர்ஆன் 2:228)

3. மாதவிடாய் அற்றுப் போன பெண்களின் இத்தாக் காலம்:
 
மாதவிடாய் அற்றுப் போன பெண்கள் மூன்று மாதங்கள் ‘இத்தா’ இருக்க வேண்டும் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது. இறைவன் தனது திருமறையில்,
‘உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக்கெடு மூன்று மாதங்கள். கர்ப்பிணிகளின் காலக்கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அழ்ழாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான்.’ (அல்குர்ஆன் 65:04)
4. கர்ப்பிணிப் பெண்களின் இத்தாக் காலம்:

 
கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை ‘இத்தா’ இருக்க வேண்டும் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது. இறைவன் தனனது திருமறையில்,
‘உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக்கெடு மூன்று மாதங்கள். கர்ப்பிணிகளின் காலக்கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அழ்ழாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான்.’ (அல்குர்ஆன் 65:04)

எவருக்கும் எந்த அநியாயமும் பாதிப்புகளும் ஏற்படக்கூடாது என்பதற்காக அல்லாஹ் மார்க்கத்தில் பல வரையறைகளையும் சட்டங்களையும் அமைத்துள்ளான். அதனை மனிதர்கள் மீறும் பட்சத்திலேயே இழப்புகளை எதிர்க்கொள்கின்றனர். அந்த வகையில் திருமணத்தின் மூலம் பெண்களுக்கே அதிக கஷ்டங்கள் இல்வாழ்வில் ஏற்படுகின்றது. ஒரு பெண்ணுக்கு அவளது கணவன் இறந்து விட்டாலோ அல்லது அவளை விவாகரத்து செய்து விட்டாலோ இன்னும் அதிக இழப்புகளைச் சந்திக்க நேரிடுகின்றது. இளம் வயதுடைய ஒரு பெண்ணுக்கு இந்த மாதிரி நிலைமை ஏற்படின் அவளுக்கு இன்னொரு வாழ்க்கைத் துணை கட்டாயம் தேவைப்படும். எனவே அவள் மறுமணம் செய்ய வேண்டும்.
 
கணவன் இறந்து அல்லது விவாகரத்து செய்த மறுகணமே அல்லது காலவரையறை எதுவுமின்றி அவள் மறுமணம் செய்தால் அவளுக்கு மறுமணத்தின் பின்னர் கிடைக்கும் குழந்தைக்கு தந்தை யார்? என்பதில் சில வேளைகளில் புதிய கணவனுக்கோ மற்றவர்களுக்கோ சந்தேகம் ஏற்படலாம். இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக அதனை கண்டுபிடிக்க சாதனங்கள் இருப்பினும் பணத்தை வீசி பொய்யான மருத்துவ அறிக்கைகளைப் பெறுவதும் கூட மிக இலகுவாக உள்ளது. அதனால் பாதிக்கப்படுவது அந்தப் பெண் மட்டுமல்ல அவளது குழந்தையும் தான். அதனால் தான் அல்லாஹ் பெண்ணுக்கு மறுமணத்திற்காக ஒரு காத்திருப்பு (இத்தா) காலத்தை ஏற்படுத்தி கருவுற்றிருப்பதை ஊர்ஜிதம் செய்து தெளிவுபடுத்தியதன் பின்னரே மறுமணம் செய்ய அனுமதித்துள்ளான். இது பெண்களுக்கு கிடைத்த அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடையாகும்.
இத்தா வின் போது தடைசெய்யப்பட்டவை.

 
‘இறந்தவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின்னர் அவனுடைய மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த நாட்களில் நாங்கள் சுருமா இடவோ, மணப் பொருட்களைப் பூசவோ, சாயமிடப் பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும்போது மணப் பொருளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வதைவிட்டும் தடுக்கப்பட்டுள்ளோம்” என உம்மு அதிய்யா (ரலி) அறிவித்தார்.
நூல் : புகாரி 313
கணவனை இழந்த பெண், மஞ்சள் அல்லது சிவப்புச் சாயம் பூசப்பட்ட ஆடைகள், நகை ஆகியவற்றை அணியக் கூடாது; தலைக்குச் சாயம் பூசக் கூடாது; சுர்மா இடக் கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
நூல்: அபூதாவூத் 1960
மறுமணத்தைத் தள்ளிப் போடும் இந்தக் காலகட்டத்தில் நகை அணியலாகாது. மருதானி போன்ற சாயங்கள் பூசக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
நூல் : அபூதாவூத் 1960, அஹ்மத் 25369


இத்தாவில் இருக்க வேண்டிய முறைகள்.
 
மார்க்கச் சட்டமானது ஆண், பெண் எல்லோருக்கும் பொதுவானது. எப்போதும் பின்பற்றப்பட வேண்டியது.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
அல்குர்ஆன் 24:31


இது பெண்களுக்காக அல்லாஹ் எப்பொழுதும் இருக்குமாறு சொல்கின்றான். பெண்கள் திருமணம் முடிப்பதற்கு முன்னாலும், திருமண் முடித்த பின்னாலும், கணவனை இழந்தாலும்,இழக்காவிட்டாலும் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும். பொதுவாக பருவ வயதை அடைந்தது முதல் மௌத்து வரைக்கும் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அல்குர்ஆன் கூறுகின்றது.

முஹம்மதே! தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 24:30


எனவே இத்தா இருப்பதற்கு என்று விசேடமான முறைகள் எதுவுமில்லை. சர்வ சாதாரணமாக அன்றாடம் செய்யும் வேலைகளைச் செய்து கொண்டு அல்லாஹ் தவிர்க்கும் படி கூறியவைகளை தவிர்க்க வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக........
 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,........................,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அஹமட் யஹ்யா..
ஹொரோவபதான, அனுராதபுரம், SRI LANKA
****************************
  

பயனளிக்கும் மூன்று விடையம்.

 
 
அஸ்ஸலாமு அலைக்கும் வபஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..
அன்பின் சகோதர சகோதரிகளே....

புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே! அவனைப் பயந்தவர்களுக்கே இறுதி முடிவு நல்லதாக அமையட்டுமாக, ஸலவாத்தும் ஸலாமும் மனிதருள் மாணிக்கமான முஹம்மது நபி (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் வழியைப் பின்பற்றியோர் மீதும் உண்டாகட்டுமாக.


பயனளிக்கும் மூன்று விடையம்.  
 
 ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுடைய அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும்.

1. நிலையான தான தர்மம் (ஸதகத்துல் ஜாரியா) 2. பயனளிக்கக் கூடிய அறிவு 3. தனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய சிறந்த பிள்ளை. (முஸ்லிம்)
மனிதனுக்கு அல்லாஹ் இரண்டு கட்ட வாழ்கையை அமைத்திருக்கிறான்.அதில் இவ்வுலக வாழ்க்கை , மறுமை வாழ்க்கை
இவ்வுலகில் வாழும் மனிதன் அவனுக்கு இஸ்லாம் காட்டிய வாழ்கையை வாழ வேண்டும் பிறக்கும் போது மனிதன் எதையும் கொண்டு வரவில்லை இறக்கும் போதும் மனிதன் எதையும் கொண்டு போவதுமில்லை அவன் இவ்வுலகில் செய்த நற்கருமங்களைத் தவிர.
மரணத்துக்கு முன்னால் மனிதன் பல நிலமைகளில் ஆட்சி அதிகாரம்,பட்டம் பதவி, சொத்து சுகம், ஏழை பணக்காரன்,கருப்பன் பெள்ளையன், உயர்ந்தவன் கட்டையானவன், நல்வன் கெட்டவன் என்று பல கோணங்களில் மனிதன் இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றான்.
ஆனால் இவைகளில் எது மறுமைக்கு பிரயோசனம் தரும் என்பதை மறந்து இவ்வுலக வாழ்க்கையை "கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழும் மனிதன்" மரணம் என்ற பானம் வரும் போது அவனது ஆட்சி அதிகாரம்,பட்டம் பதவி, சொத்து சுகம், இவைகள் எதும் மரணத்தோடு வருவது கிடையாது வெள்ளை ஆடை கபன் உடையுன் கப்ருக்குள் வைக்கப்படுகின்ற மனிதனுக்கு பிரயோசனமாக வரக்கூடிய மூன்று விஷயங்களை நபி(ஸல்)அவர்கள் கூறிய நபி மொழி நமக்கு என்றைக்கும் எப்போதும் பாடமாக இருக்கின்றது அந்த மூன்று விஷயங்களையும் இன்ஷா அல்லாஹ் இக்கட்டுரையில் அறிந்து கொள்ளாம் என ஆவலுடன் சமர்ப்பிக்கிறேன்.

1 வது நிலையான தர்மம்.

 
நபியவர்கள் கூறிய முதலாவது விஷயம் நிலையான தர்மம். ஒரு மனிதனுக்கு அல்லாஹ் செல்வத்தைக்கொடுக்கிறான் அந்த செல்வம் அவனிடம் இருக்கும் காலமெல்லாம் அவைகளை முறையாக செயல் படுத்தவும் காட்டியிருக்கிறான். காரணம் இன்று இருப்பவன் நாளைய தினம் வேறு ஒரு நிலைக்கு மாறலாம் இது அல்லாஹ்வின் நியதி இதே நிலையில் அவனுக்கு வறுமை கூட வரலாம் அவைகளுக்கும் இஸ்லாம் நமக்கு பொறுமை என்ற பாடத்தை பொக்கிஷமாக வழங்கியுள்ளது.
வறுமையைப் பற்றி பேசிக் கொண்டும், அதுபற்றி அச்சம் தெரிவித்துக் கொண்டும்
நாங்கள் இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி வந்து ‘வறுமையை
(நினைத்தா) அஞ்சுகிறீர்கள்? எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது
ஆணையாக (வருங்காலத்தில்) இந்த உலக(த்துச் செல்வ)ம் ஒரேயடியாக உங்கள் மீது
பொழியப்படும்! உங்களின் உள்ளத்தை (நல்வழியை விட்டும்) ஒரேயடியாக திசை
திருப்பிவிடக் கூடியதாகத் தான் அந்தச் செல்வம் அமையும். அல்லாஹ்வின் மீது
ஆணை! வெள்ளை வெள்ளேர் என்ற பாதையில் நான் உங்களை விட்டுச் செல்கிறேன்.
அதில் இரவும் பகலும் சமமானதாக இருக்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள்
கூறியதாக அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

எனவே இந்த வறுமை வருவதற்கு முன்னால் செய்ய வேண்டிய விஷயங்கள் நமக்கு இருக்கத்தான் செய்கின்றன. நிலையான தர்மம் என்றால் அவன் செய்யும் தர்மம் மறுமைக்கு பிரயோசனம் அழிக்க வேண்டும். பொதுமக்களுக்காக ஒருவர் ஒரு கிணற்றை அமைக்கிறார்,அல்லது மக்கள் ஒய்வு எடுப்பதற்காக ஒரு மரத்தை நட்டுகிறார்,அல்லாது மார்க்கக்கல்வியைப் படிப்பதர்காக ஒரு மதரஸாவைக் கட்டுகிறார்,அல்லாது ஒரு பள்ளிவாசலைக்கட்டுகிறார் என்றால் இவைகளே நாளை மறுமைக்கும் நாம் மரணிக்கும் போது நம் கூட வரயிருக்கும் நிலையான சொத்து இந்த தர்மமே.
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.()2:261)
2வது பயனளிக்கக்கூடிய கல்வி.

 
நபியவர்கள் கூறிய இரண்டாவது விஷயம் பயன் தரும் கல்வி. அல்லாஹ் மனிதனுக்கு பகுத்தறிவைக்கொடுத்து நல்லதையும் கெட்டதையும் பிரித்துக்காட்டியிருக்கிறான். இதில் மனிதன் அரிய வேண்டிய கடமைகள் படிக்க வேண்டிய பாடங்கள் ஏறாலம்.

நன்மையை - தீமையைப் பிரித்தறிவதற்கான உணர்வையும் அறிவையும் இறைவன் மனித இயல்புக்கு அருளியுள்ளான்.


நிச்சயமாக அல்லாஹ் எந்த சமுதாயத்தின் நிலையையும் மாற்றுவதில்லை – தங்களைத் தாங்களே அவர்கள் மாற்றிக்கொள்ளாத வரை – அல்லாஹ் ஒரு கூட்டத்தினருக்குத் தீங்கை நாடினால், அதனைத் தடுப்பவர் எவருமில்லை: அவர்களுக்கு அவனையன்றி எந்த உதவியாளருமில்லை.” (13:11)
நல்லறிவு பெற்று மனிதன் நல்லவனாக வாழும் போதுதான், அவன் இறைவனின் பிரதிநிதியாகும் தகுதியைப் பெறுகிறான். அம்மனிதனுக்கு இறைவன் நல்கிய பெரும் அருட்கொடை யாது? இறைவனே தன் திருமறையில் இதனைக் குறிக்கிறான்.
“(நபியே) ஓதுவீராக! ஊம்முடைய ரப்பு தயாளமானவன் – அவன் எத்தகையோனென்றால் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றை (யெல்லாம்) அவன் கற்றுக் கொடுத்தான்.” (96:3,4.5)

அல்குர்ஆனில் இறங்கிய முதல் வசனமே ஒதுவீராக என்றுதான்.இதிலிருந்து கல்வியின் முக்கியத்துவம் பற்றி விளங்கலாம் பிரயோசனமான கல்விக்கு பெற்றார்கள் எந்த அளவுக்கு அக்கரைகாட்ட வேண்டும் நம் பிள்ளைகளை மார்க்க விஷயங்களை எந்த அளவுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை அல்லாஹ் நபியவர்களுக்கு இந்த ஆரம்ப வசனத்தில் ஓதுமாறு கற்றுக்கொடுக்கிறான்.

எனவே நமது இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள். இந்த சிறார்களுக்கு கல்வியின் முக்கியம் பற்றி அவைகளுக்கு தேவையான வழிமுறைகளை பெற்றார்கள் கவனத்தில் கொள்லுவது கடமை இன்று நவீனயுகம் என்று நாமெல்லாம் நாவு கூசாமல் சொல்லிக்கொண்டிருக்கிறோம் பிள்ளைகலுக்கு மார்க்கக்கல்வியை ஊட்டுதற்குப்பதிலாக நமது வீடுகளை ஷைத்தானின் இடமாக மாறியுளதை காணமுடிகின்றது. டீவி என்ற ஷைத்தானின் காட்சிகளை நடிகர் ,நடிகைகளின் ஆடல்கலையும் பாடல்கலையும் பெற்றார்கள் ,உற்றார்கள் உற்பட பிள்ளைகளும் சேர்ந்து இவைகளை ரசிக்கும் காட்சிகளையும் பார்க்கமுடிகின்றது இப்படி இருக்கும் நிலையில் அவனுக்கு மரணம் வந்து விட்டால் நிலமை என்னவாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் .


இஸ்லாமியக் கல்வியைக் கற்றுக்கொள்கின்ற உங்கள் பிள்ளை, அத்துடன் இஸ்லாமியப் பண்பாடுகளையும் ஒழுக்கத்தையும் இறையச்சத்தையும் கற்றுக்கொள்கிறான். இதனால் உங்கள் பிள்ளை பெற்றோரை மதிக்கின்ற பிள்ளையாக, உங்களின் முதுமையில் உங்களைக் கைவிட்டுவிடாத பிள்ளையாக, அனைவராலும் மதிக்கப்படுகின்ற பிள்ளையாக, அல்லாஹ்வின் அன்பைப் பெற்ற பிள்ளையாக உருவாகும். பெற்ற உங்களுக்கு இதைவிட வேறு பெருமை என்ன வேண்டும்? யோசியுங்கள்; பலமுறை யோசியுங்கள். மார்க்கக் கல்வியை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதால் தீமை ஏதும் உண்டா? இனியும் ஏன் தாமதம்?


மறுமைப் பயனைப் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதாவது: (உங்களுள்) திருக்குர்ஆனைக் கற்று, அதன்படி செயல்பட்டவரின் பெற்றோருக்கு மறுமையில் ஒரு கிரீடம் அணிவிக்கப்படும். அது, உலகில் ஒருவரின் வீட்டில் சூரியன் இருந்தால் எவ்வாறு அவ்வீடு ஒளி இலங்குமோ அதைவிட ஒளிமிக்கதாக இருக்கும். அப்படியென்றால், அதன்படி செயல்பட்டவருக்கு என்ன (கிடைக்கும்) என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள். (நூல்: அபூதாவூத்)

எனவே பிரயோசனமான கல்வியைக் கற்று மாறுமைக்கு நமக்குத் துணையாக அக்கல்வி அமைய வேண்டும். மரணிக்கும் போது இக்கல்வி நம்கூட வரவேண்டும் என்றால் பெற்றார்கள் பல தியாகங்களை நமது பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டும்.இஸ்லாமிய ஒழுக்கம்,நற்பண்பு,மரியாதை,சுத்தம் போன்ற விடையங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

3வது தனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய சிறந்த பிள்ளை.
 
நாம் இவ்வுலகில் எத்தனையோ இன்பங்களையும்,அருட்கொடைகளையும் அனுபவிக்கிறோம்.
அப்படிப்பட்ட இன்பங்களில் மிகச் சிறந்ததாக இஸ்லாம் கூறுவது நல்லொருக்கமுள்ள மனைவியே.
பிறப்பு முதல் இறப்பு வரை நாம் எத்துணையோ உறவுகளையும்,நட்புகளையும் கடந்து வந்தாலும் மிகப் பூரணமான உறவு வாழ்க்கைத்துணையே.
இந்த வாழ்க்கை சீராக அமையும் என்றால் நமக்கு பிறக்கின்ற குழந்தயும் சீராக அமையும் என்பது வாழ்க்கையின் முதல் வேராகும்.

இவ்வுலகத்தில் பிறக்கும் எந்தக் குழந்தையும் கெட்ட குழந்தையாக பிறப்பதில்லை. எல்லா குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகத் தான் பிறக்கின்றன.
அவர்களது பெற்றோர்களின் வளர்ப்பு தான் அவர்களை நல்லவனாக அல்லது கெட்டவனாக மாற்றி விடுகிறது. (பார்க்க புகாரி 1385)

இந்த ஹதீஸின் அடிப்படையில் குழந்தைகளை நல்ல குழந்தைகளாக உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.
எனவே நல்ல குழந்தைகளாக உருவாக்குவதற்கான முழு முயற்சிகளை மேற்கொள்வது பெற்றோர்களின் கடமையாகும்.
மனித இனத்திற்கு வழிகாட்டியாக வந்த இறைத் தூதர்கள் தம் குழந்தைகளை மார்க்கப் பற்றுள்ள குழந்தைகளாக உருவாக்குவதற்குத் தங்களால் ஆன முயற்சிகளைச் செய்துள்ளார்கள் என்பதைத் திருக்குர்ஆன் தெளிவு படுத்துகிறது.


''என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம் களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது'' என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர். (அல்குர்ஆன் 2:132)

இஸ்லாமிய மார்க்கத்தில் நம் குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும்? எப்படி வார்த்து எடுக்க வேண்டும்? எப்படி கல்வி கற்க பயன்படுத்த வேண்டும்? எப்படி உபதேசம் செய்ய வேண்டும்? எப்போது அடிக்க வேண்டும் போன்ற அனைத்திற்கும் நல்ல வழிகாட்டல்கள் உள்ளன. முதலில் பெற்றார்கள் இஸ்லாமிய சட்ட திட்டங்களை தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் பேரக் குழந்தைகள் ஹஸன்(ரலி), ஹுசைன்(ரலி) அவர்களுக்கு ஒவ்வொரு ஷைத்தானை விட்டும், நஞ்சுள்ள பிராணியை, தீண்டக்கூடிய ஒவ்வொரு பார்வையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடினார்கள். நூல்: புகாரி 119.
குழந்தைகள் முதலில் கற்கும் கல்வி தாயிடமே. அந்த தாய் எதை சொல்லி தருகிறாளோ அதுவே பசு மரத்தாணி போல் உள்ளத்தில் பதிந்து விடும். ஒரு தாய் நினைத்தால் தன் குழந்தையை எப்படிப்பட்டவர்களாகவும் உருவாக்க முடியும் இது தாயின் கடமையும் கூட.  
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வொருவரும் உங்களின் பொறுப்புகளைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள் ஒரு பெண் தன் கணவனின் வீட்டிற்கும், அவனின் குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அறிவிப்பாளர் உமர்(ரலி) அவர்கள் புகாரி 2554
எனவே மரணத்தின் போது நம் கூட வரக்கூடிய பிரயோசனம் தனக்காக பிராத்திக்கும் சிறந்த குழந்தை இந்தக்குழந்தையை இவ்வுலகில் நாம் ஸாலிஹான குழந்தையாக மாற்றி அமைத்தால் இன்ஷா அல்லாஹ் இந்த பாக்கியத்தை நாமும் அடைந்து கொள்வோம் என்பதில் சந்தேகமில்லை.

எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.....
அஹமட் யஹ்யா.
ஹொரோவபதான, அனுராதபுரம், SRI LANKA 
*****************************************