சின்னச் சின்ன செயல் ஏறாளமான நன்மைகல்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
அளவற்ற அருளாளன்,நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திரு நாமம் போற்றி துவங்குகின்றேன்.
அல்ஹம்துலில்லாஹ்...
மனிதனுக்கு அல்லாஹ் சிரமத்தை நாடவில்லை, மனிதன் தன் செயலால்,சிந்தனையால்
தனக்குள்ளே பல சிரமங்களை அவ்வப்போது ஏற்படுத்திக்கொள்கின்றான், சின்னச்
சின்ன அமலாக இருந்தாலும் அவைகளை தூய்மையாகச் செய்யும் போது ஏறாளமான
நன்மைகளை அவன் அடைகின்றான் சுருக்கமாகச் சொன்னால் தன் சகோதரனைப் பாரத்து
புன்னகைப்பதும் தர்மம் என்று நபியவர்கள் கூறினார்கள்.
இது போன்று
ஏறாளமான நன்மைகளை தருவது நமது செயல் இதன் அடிப்படையில் மனிதன்
செய்யவேண்டிய,நன்மைகளைத் தேடவேண்டிய நபிகளாரின் போதனைகளை இங்கே
குறிப்பிடுகின்றேன்.நல்லுணர்வு பெருவோர் நிறைவான நன்மைகளைப் பெற்று பிற
மக்களுக்கும் செய்யுமாறு கட்டளை பிறப்பிக்கவே இத்தலைப்பை தேர்ந்தெடுத்தேன்
இன்ஷா அல்லாஹ் ..அல்லாஹவுக்கே எல்லாப் புகழும்.
முஃமின் மற்றொரு முஃமினுக்கு
உடல்
"ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும் அன்பு செலுத்துவதிலும், இரக்கம்
காட்டுவதிலும் இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ
காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால்அதனுடன் மற்ற உறுப்புகளும்
உறங்காமல் விழித்துக் கொண்டிருக் கின்றன. அத்துடன் (உடல்முழுவதும்)
காய்ச்சல் கண்டு விடுகின்றது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: புகாரி 6011
கட்டிடம்
"ஒரு கட்டடத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திக்
கொண்டிருக்கின்றதோ அது போலவே ஒரு முஃமின் இன்னொரு முஃமின் விஷயத்தில் நடக்க
வேண்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களைக்
கோர்த்துக் காட்டினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி),
நூல் : புகாரி 481
இறந்த வீடு
இறை நினைவில்லாத வீடு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் நினைவு கூறப்பட்டுப் போற்றப்படும்
இல்லத்தின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும், அல்லாஹ் நினைவு
கூறப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும்
ஒத்திருக்கிறது.
அறிவிப்பவர்: அபூ மூசா (ரலி)
நூல்: முஸ்லிம் 1429
நபியின் உதாரணம்
கட்டிடத்தின் இறுதி செங்கல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் எனக்கு
முன்பிருந்த இறைத்தூதர்கன் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக
அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு
விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து
விட்டு ஆச்சரியமடைந்து, இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக்
கூடாதா? என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான்
தான் இறைத் தூதர்களில் இறுதியானவன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 3535
கஞ்சனும்,வள்ளனும்
"கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்து
வரை இரும்பாலான அங்கிகள் அணிந்த இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம்
செய்பவர் தர்மம் செய்யும் போதெல்லாம் அவருடைய அங்கி விரிந்து விரல்களை
மறைத்துக் கால்களை மூடி, தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன்
செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு
வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும் அவன் அதை விரிக்க முயன்றாலும் அது
விரியாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1443, 1444, 5797
ஐவேளைத் தொழுகையின் உதாரணம்
'உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது; அதில்
அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கின்றார்; அவரது மேனியிலுள்ள அழுக்குகளில்
எதுவும் எஞ்சியிருக்குமா? எனக் கூறுங்கள்' என்று நபித்தோழர்களிடம் நபி
(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது'
என நபித்தோழர்கள் கூறினர். 'இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன்
மூலம் அல்லாஹ் (சிறிய) பாவங்களை அகற்றுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ 528, முஸ்லிம் 1071
அன்பளிப்பை திரும்பப் கேட்பவன்
தன் வாந்தியை தின்னும் நாய் போன்றவன்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப்போன்றவன் ஆவான்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (2589)
வளைந்த எலும்பை மேலும் வளைக்காதே!
பெண்கள் வளைந்த எலும்பு போன்றவர்கள். அதனை நிமிர்த்த முயன்றால் அதனை
உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளை விட்டு விட்டால்
அவளிடம் இன்பம் பெறுவாய் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3331, 5184, 5186
முஃமினே ஏமாறாதே!
இறைநம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6133
குர்ஆன் ஒதுபவரின் உதாரணம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன்
சுவையும் நன்று!வாசனையும் நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல்
இருப்பவர், பேரீச்சம் பழத்தைப்போன்றவராவார். அதன் சுவை நன்று; அதற்கு வாசனை
கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டுகுர்ஆனை ஓதி வருகின்றவனின் நிலை
துளசிச் செடியின் நிலையை ஒத்து இருக்கின்றது. அதன்வாசனை நன்று, சுவையோ
கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின்நிலை
குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு
வாசனையும்கிடையாது.
அறிவிப்பவர்: அபூ மூஸல் அஷ்அரீ (ரலி)
நூல்: புகாரி 5020
ஸஜ்தாவில் நாயைப் போல் விரிக்காதே!
'ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைப்பிடியுங்கள்; உங்களில் எவரும் நாய்
விரிப்பதைப் போல் கைகளை விரிக்கக் கூடாது' என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 822, முஸ்லிம் 850
நல்ல நண்பன், கெட்ட நண்பன்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும்
கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்தி ருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும்
கிடைக்காமல் போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையா
வது பெற்றுக்கொள்ளலாம்! கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்து
விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்!
அறிவிப்பவர் : அபூமூசா (ரலி)
நூல் : புகாரி (2101)
மெளனம் சம்மதமே!
கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம் பெற வேண்டும் என்று நபிகள்
நாயகம் (ஸல்) கூறிய போது கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே
என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளது மௌனமே அவளது
சம்மதமாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 6971, 6964, 5137
நயவஞ்சகனின் உதாரணம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் நிலை இரு கிடாக்களிடையே
சுற்றிவரும் பெட்டை ஆட்டின் நிலையைப் போன்றதாகும். ஒரு முறை இதனிடம்
செல்கிறது; மறுமுறை அதனிடம் செல்கிறது.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),
முஸ்லிம் (5369)
தொழுகையில் ஒட்டகத்தைப் போல் அமராதே!
'உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது மூட்டுக் கால்களை வைப்பதற்கு
முன் தனது கைகளை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம்.' என நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: நஸயீ 1079
முஃமினுக்கு உலகம் சிறைச்சாலை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம், இறை
நம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறை மறுப்பாளர்களுக்குச்
சொர்க்கச் சோலையாகும்
அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 5663
அல்லாஹ்வை எப்படி பார்ப்போம்
"அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?''
என்று நாங்கள்கேட்டோம். அதற்கு அவர்கள், "(மேக மூட்டமில்லாது) வானம்
தெளிவாக இருக்கையில் சூரியனையும்சந்திரனையும் பார்க்க நீங்கள்
(முண்டியடித்துக் கொண்டு) சிரமப்படுவீர்களா?'' என்று கேட்டார்கள்.நாங்கள்,
"இல்லை'' என்று பதிலளித்தோம். "இவ்விரண்டையும் பார்க்க நீங்கள்
சிரமப்படாததைப்போன்றே அந்த நாளில் உங்கள் இறைவனைக் காணவும் நீங்கள்
சிரமப்பட மாட்டீர்கள்''
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 7439
சொர்கத்திற்கான அழைப்பை ஏற்றவரின் உதாரணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது அவர்களிடம் சில
வானவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர்’இவர் உறங்கிக் கொண்டிருக்கிறார்’
என்றார். அதற்கு மற்றொருவர் ‘கண்கள் தான் உறங்குகின்றன; உள்ளம்
விழித்திருக்கிறது’என்று கூறினார். பின்னர் அவர்கள் ‘உங்களுடைய இந்த
நண்பருக்கு ஓர் உவமை உண்டு; இவருக்கு அந்த உவமையை எடுத்துரையுங்கள்’ என்று
பேசிக் கொண்டார்கள். அப்போது அவர்களில் ஒருவர் ‘இவர் உறங்குகிறாரே!’
என்றார். மற்றொருவர் ‘கண் உறங்கினாலும் உள்ளம் விழித்திருக்கிறது’ என்றார்.
பின்னர் அவர்கள் ‘இவரின் நிலை ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர்
ஒரு வீட்டைக் கட்டினார். அவ்வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.
(மக்களை) அழைப்பதற்காக ஓர் ஆளை அனுப்பினார். அழைப்பாளியின் அழைப்பை ஏற்று
வந்தவர் வீட்டினுள் சென்றார்; விருந்துண்டார். அழைப்பை ஏற்காதவர்
வீட்டிற்குள் நுழையவுமில்லை; விருந்து உண்ணவுமில்லை’ என்று கூறினர்.
பின்னர் அவர்கள் ‘இந்த உவமையை அவருக்கு விளக்கிக் கூறுங்கள்; அவர் புரிந்து
கொள்ளட்டும்’ என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் ‘இவர் உறங்குகிறாரே!’
என்று சொல்ல மற்றொருவர் ‘கண் தான் தூங்குகிறது உள்ளம்
விழித்திருக்கிறது’என்றார். அதைத் தொடர்ந்து ‘அந்த வீடு தான் சொர்க்கம்.
அழைப்பாளி முஹம்மத் (ஸல்) அவர்கள். முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக்
கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து விட்டார். முஹம்மத் (ஸல்)
அவர்களுக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்து விட்டார். முஹம்மத்
(ஸல்) அவர்கள் மக்களைப் பகுத்துக் காட்டி விட்டார்கள்’ என்று
விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புகாரி 7281
பாவமன்னிப்பு கேட்கும்போது இறைவனின் மகிழ்ச்சிக்கான உதாரணம்
ஒரு மனிதன் தன் ஒட்டகத்தின் மீதேறி பிரயாணம் செய்து கொண்டிருக்கிறான்,
யாருமற்ற வெட்ட வெளியில் அவனது ஒட்டகம் அவனை விட்டு ஓடவிடுகின்றது. அவனது
உணவுப் பொருட்களும் குடிப்பதற்கான தண்ணீரும் அந்த ஒட்டகத்தின் மீது தான்
இருந்தன. இனிமேல் தன் ஒட்டகம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்து
நம்பிக்கையிழந்து ஒரு மரத்தடியில் வந்து படுத்து விடுகிறான். இந்த நிலையில்
திடீரென அவனது ஒட்டகம் அவன் கண் முன்னே நிற்கக் காண்கிறான். அதன்
கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு இறைவா! நீ எனது அடிமை, நான் உனது எஜமான்''
என்று மகிழ்ச்சிப் பெருக்கில் என்ன சொல்கிறோம் என்பது கூடப் புரியாமல் கூறி
விடுகிறான். இந்த மனிதன் அடையும் மகிழ்ச்சியை விட ஒரு அடியான் பாவ
மன்னிப்புக் கேட்கும் போது அல்லாஹ் பெரு மகிழ்ச்சி அடைகிறான் என்று நபிகள்
நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 4932
நபிகள் நாயகத்தின் உதாரணம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் என்னை நல்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பியுள்ளதற்கு உதாரணம்,
நிலத்தில் விழுந்த பெருமழையின் நிலையைப் போன்றதாகும். அவற்றில் சில
நிலங்கள், நீரை ஏற்றுக்கொண்டு ஏராளமான புற்பூண்டுகளையும் செடிகொடிகளையும்
முளைக்கச் செய்யும் நல்ல நிலங்களாகும்.
வேறுசில தண்ணீரைத் தேக்கி
வைத்துக்கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதை இறைவன் மக்க ளுக்குப் பயன்படச்
செய்தான். அதிலிருந்து மக்களும் அருந்தினர்; (தம் கால்நடைகளுக்கும்)
புகட்டினர்; (பயிரிட்டுக் கால்நடைகளை) மேய்க்கவும் செய்தனர்.
அந்தப்
பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத)
வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கிவைத்துக்கொள்ளவும் இல்லை;
புற்பூண்டுகளை முளைக்கச் செய்யவுமில்லை.
இதுதான், இறைமார்க்கத்தில்
விளக்கம் பெற்று, நான் கொண்டுவந்த தூதால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து
பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டுவந்த தூதை ஏறிட்டுப்
பாராமலும் நான் கொண்டுவந்த அல்லாஹ்வின் நல் வழியை ஏற்றுக்கொள்ளாமலும்
வாழ்கின்ற வனுக்கும் உதாரணமாகும்.
அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி)
நூல்: புகாரி 4587
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் உதாரணம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு விலங்கு எப்படி முழு
வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப் போல, எல்லாக் குழந்தைகளுமே
இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன்
பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க
சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை யூதர்களாகவோ
கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்''
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 1358, 1359, 1385,
அல்லாஹ்வை நினைவு கூர்வது
இரண்டு வார்த்தைகள் நாவிற்கு எளிதானதாகவும், (நன்மையின் தராசில்)
கனமானதாகவும் இருக்கின்றன. அவை, சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில்
அழீம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 7563
ஸலாம் கூறுதல்
ஒரு மனிதர் நபி (ஸல்)
அவர்களிடம், ”இஸ்லாத்தில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்)
அவர்கள், ”நீர் (மக்களுக்கு) உணவளிப்பதும், அறிந்தவருக்கும்
அறியாதவருக்கும் நீர் ஸலாம் கூறுவதுமாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: புகாரி 12
தீங்கு தரும் பொருளை அகற்றுவது
”ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்ற போது முற்கிளையைக் கண்டு அதை எடுத்து
அகற்றிப் போட்டார். அவரின் இந்த நல்ல செயலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு
அவருக்குப் பாவமன்னிப்பு அளிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள்
சொன்னார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 2472
தொல்லை தரும் பொருளை அகற்றிப் போடுவது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 246
நல்ல வார்த்தைகளைப் பேசுதல்
நல்ல வார்த்தை பேசுவது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 6023
பேரீச்சம் பழத்தின் கீற்றைக் கொண்டாவது நீங்கள் நரகத்தை விட்டுத் தப்பிக்க
நினையுங்கள். இல்லையென்றால் நல்ல வார்த்தையின் மூலம் (நரகத்தை விட்டுத்
தப்பியுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 6023
மற்றவருக்காகப் பிரார்த்தனை செய்தல்
ஒரு மனிதன் தன்னுடைய சகோதரனுக்காக மறைவில் துஆச் செய்தால், ”உனக்கும்
அவ்வாறே ஏற்படட்டும்” என்று வானவர்கள் அவருக்காக வேண்டுவார்கள் என்று நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி) நூல்: அபூதாவூத் 1534
பிற முஸ்லிமைப் பார்த்து புன்னகை செய்தல்
உன்னுடைய சகோதரனுடைய முகத்தைப் பார்த்து நீ சிரிப்பது கூட உனக்கு
நன்மையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்
(ரலி) நூல்: முஸ்லிம் 4760
கால்நடைகள் மீது இரக்கம் காட்டுதல்
”ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான
தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி,
அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு கிணற்றிலிருந்து அவர்
வெளியே வந்த போது நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி
ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனதிற்குள்) ”எனக்கு
ஏற்பட்டதைப் போன்றே இந்த நாய்க்கும் (கடுமையான தாகம்) ஏற்பட்டிருக்கின்றது
போலும்” என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கி,
தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு,
மேலே ஏறி வந்து அந்த நாய்க்கும் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த
நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்” என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ”அல்லாஹ்வின்
தூதரே! கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?”
என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ”ஆம்! உயிருடைய பிராணி ஒவ்வொன்றின்
விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான
பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 2363, 6009
சின்னச் சின்னச் செயல்கள்
ஏராளமான நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியதாக உள்ளன. அவற்றை நாம் செய்து
நன்மை செய்யும் நல்லடியார்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக!
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப்
போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும்
உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக.
அஹமட் யஹ்யா,ஹொரோவபதான,அனுராதபுரம்.SRI LANKA.
No comments:
Post a Comment